பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார் உள்ளும் புறமும் அழகானவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த அவர் வின்ட்ஸர் மாளிகையில் எலிஸபெத் மகாராணியாருடன் (92 வயது) மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகாராணியார் அற்புதமான ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பேட்டியானது நேற்று திங்கட்கிழமை காலை ஐ.ரி.வி. தொலைக்காட்சியின் ‘குட் மோர்னிங் பிரிட்டன்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.
“அவர் அதிகளவான சக்தியையும் திடகாத்திரத்தையும் கூர்மையையும் கொண்ட அற்புதமான பெண். அவர் பிரமாதமான ஒருவர். அவர் உன்னதமானவர். அவர் மிக மிக அழகானவர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
தான் அவ்வாறான அற்புதமான பெண்ணை இறுதியில் சந்தித்தமையை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
“அவர் (மகாராணியார் ) வெளியே மட்டும் அழகானவர் அல்ல. அவர் அகத்தேயும் புறத்தேயும் அழகானவராக உள்ளார். அவர் மிகவும் அழகானவரும் விசேடத்துவம் பொருந்திய ஒருவருமாவார்” என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
2000 ஆம் ஆண்டில் 88 ஆவது வயதில் மரணமான தனது தாயாரான மேரி ஆன் ட்ரம்ப் எலிஸபெத் மகாராணியாரின் ரசிகையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
எலிஸபெத் மகாராணியார் தனது 66 வருட கால முடியாட்சி காலத்தில் அமெரிக்காவில் ஹாரி எஸ். ட்ரூமன் முதல் டொனால்ட் ட்ரம்ப் வரை 13 பேர் ஜனாதிபதி பதவியை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!