மொட்டு அரசை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கோர முடிவு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
    
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும்,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான ஆளும் தரப்பு குழு கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர்து மாற்று திட்டங்கள் ஏதும் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.நாணய நிதியத்தின் சாதக காரணிகளை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் தரப்பினர் பாதக காரணிகளை பகிரங்கப்படுத்தாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக காணப்படுகிறது.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினோம்.

தற்போதைய அரசாங்கம் – லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பல்வேறு காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாக்க வேண்டிய பொறுபபு காணப்படுகிறது.தவறுகள் இடம்பெற்ற இடத்தில் இருந்து தான் அதற்கு தீர்வு காண வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம். அரசியல் ரீதியிலான தவறுகள் தற்போது திருத்திக்கொள்ளாவிடின் அது எதிர்கால அரசியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!