இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 94 வயது மூதாட்டி!

பின்லாந்தில் நடந்த தடகள சாம்பியன்ஷிப்பில் 94 வயதான இந்திய பெண்மணி தங்கம் வென்றார். அவரை “அனைவருக்கும் உத்வேகம்” என்று பல மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான ஓட்டப்பந்தய வீராங்கனை பகவானி தேவி தாகர், சமீபத்தில் பின்லாந்தின் தம்பேரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
    
பகவானி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 24.74 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றதாக இந்திய விளையாட்டு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், குண்டு எறிதல் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் என்பது 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வு ஆகும். ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை பின்லாந்தில் நடைபெற்றது.

பகவானியின் சாதனைகள் நாட்டின் அனைத்து மூலைகளிலும் பாராட்டப்பட்டது. அனுராக் தாக்கூர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் 94 வயதான அவரை “அனைவருக்கும் உத்வேகம்” என்று பாராட்டினர்.

பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பதிவில், “உலகம் அவரது காலடியில்! பின்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றதற்காக நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். 94 வயதில் என்ன சாதனை!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா முதல்வர் மன்ஹோர் லால் கட்டரும் பகவானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!