விமல் வீரவன்ஸவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட சிலர், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்துக்கு அருகில் வீதியை மறித்து அடக்குமுறை ரீதியிலான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை சுற்றி வீதிகளை மறித்து, பொதுமக்களுக்கு அடக்குமுறையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிரதிவாதிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

எனினும் இதனுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!