‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடந்து வந்தது. 4 கட்டங்களாக நடந்து வந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் இன்று முறைப்படி படையில் சேர்க்கப்படுகிறது. இந்த கப்பலை பிரதமர் மோடி முறைப்படி சேர்த்து வைக்கிறார். 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான கட்டுமான செலவு ரூ.19,341 கோடி ஆகும். இந்த கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கு மேற்பட்டோர் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.

முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள உருக்கு மற்றும் தளவாடங்களில் 76 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியானவை ஆகும். குறிப்பாக டெல்லி உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போர்க்கப்பலின் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. இதற்கான பொருட்களை 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரித்து வழங்கின.

மிதக்கும் விமான தளமான ஐ.என்.எஸ். விக்ராந்தில் இருந்து 30 விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்க முடியும். அதில், மிக்-29 கே போர் விமானங்கள், கமோவ்-31, எம்எச்-60 ஆர் பல்பயன்பாட்டு ஹெலிகாப்டர்களுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, எடை குறைவான நவீன ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் அடங்கும்.

இந்த கப்பலில் உள்ள 4 கியாஸ் விசையாழிகள் மூலம் கப்பலுக்கு தேவையான 88 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளப்படும். இந்த மின்சாரத்தால் பாதி கொச்சின் மாநகரத்துக்கு ஒளியூட்ட முடியும். இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்து மகா சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!