இலங்கையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகள் கண்டுபிடிப்பு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராபிட்டிய மருத்துவ பீடத்தின் ஆய்வுக் குழுவொன்று, கோவக்கா செடியின் இலைகளைப் பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளது.

காலி கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முதன்முறையாக இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்துக்கான காப்புரிமையையும் ஆய்வுக்குழு பெற்றுள்ளது.

பக்க விளைவுகள் இல்லை

பேராசிரியர் டி.பி.வீரரத்ன, கலாநிதி கே.பி.ஜி.வாசனா, பேராசிரியர் கே.ஏ.பி.டபிள்யூ. ஜயதிலக, பேராசிரியர் ஏ.பி. அத்தநாயக்கவின் ஆய்வுக் குழுவினர் இந்தப் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

158 நீரிழிவு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த மருந்தின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதும், மருந்தை உட்கொள்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியில் புதிய மருந்து விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படும் என பேராசிரியர் டி.பி. வீரரத்ன தெரிவித்தார். இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜீவ அமரசேனவும் கலந்துகொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!