அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! டலஸின் கடும் விமர்சனம்

அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து டலஸ் அழகப்பெரும கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்

அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில், கடந்த 27ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர்  தாபனக்கோவை விதிகளின் 47ஆம் சரத்து 6,7ஆம் உப சரத்துகளின் அடிப்படையில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அரச ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்வதேச தகவல் அறியும் சுதந்திர தினத்தில் அரச ஊழியர்களின் தகவல் அறியும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபத்தை மீளப் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தோற்கடிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திலேயே இந்த தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளமை உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகும்” என்று டலஸ் அலகப்பெரும தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!