அனைத்து ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் அது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் கலவையாகும். ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில் அல்ல. அது சேவைக்கு அப்பாற்பட்ட ஒரு பொறுப்பாகும்.

அதனால்தான் ஆசிரியர், சமுதாயத்தில் உயர்வாகக் கருதப்படுகின்றார் . இப்படிப்பட்ட பெருமைக்குரிய பணியை ஆற்றிவரும் ஆசிரியரை போற்றும் வகையில் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுகின்றோம்.

அரசாங்கம் என்ற வகையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணிக்கான எமது பொறுப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். கல்வி அமைச்சராக நான் பணியாற்றியபோது ஆசிரியர் பணியின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயற்பட்டேன்.

அரசியல் அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தை இடைநிறுத்தவும், கல்வியியல் கல்லூரி முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூறுகின்றேன். ஆசிரியர்களுக்கு நவீன உலகத்துடன் இணைவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் நான் அவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பதற்கான விசேட பயிற்சியை ஏற்பாடு செய்தேன்.

மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிடும் இவ்வேளையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்கள், தங்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் உயர்வான ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்கள் இன்று (06.10.2022) ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். மனிதர்களை சீரான வாழ்க்கைக்கு அழைத்து செல்வது கல்வியாகும்.

அக்கல்வியை மனிதனின் வாழ்க்கையில் சீர்செய்து சமப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!