தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை சற்று விலகுவதற்கான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை அளவு சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்துக்கு மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் இன்றும், நாளையும் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதன் பின்னர் 8-ந் தேதி (நாளை மறுநாள்) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) என 2 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை மேற்சொன்ன பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், சின்கோனா, ஏற்காடு தலா 3 செ.மீ., மன்னார்குடி, தேவாலா, பார்வூட், மடத்துக்குளம், ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி தலா 2 செ.மீ., நடுவட்டம், கூடலூர் பஜார், கல்லணை, தாளவாடி, பெரியநாயக்கன்பாளையம், பவானிசாகர், பெரியார், ராசிபுரம், சங்கரன்கோவில், தூத்துக்குடி, தத்தியெங்கர்பேட்டை, மேல்கூடலூர், பந்தலூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!