இரவில் பெண்கள் சுதந்திரமாக நடமாட 4 நாள் திருவிழா

பெண்கள் நள்ளிரவில் நகை அணிந்து தனியாக பாதுகாப்பாக என்றைக்கு செல்கிறார்களோ, அன்று தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’ என்று மகாத்மா காந்தி கூறினார். எனவே காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் கேரளாவில் புதுமையான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெண்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாக வெளியில் வரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை ஏற்படுத்துவதற்காக மூவாற்றுப்புழாவில் 4 நாட்கள் இரவு திருவிழா நடத்தப்பட்டது. மூவாற்றுப்புழா தொகுதி எம்.எல்.ஏ. மேத்யூ முயற்சியின் பேரில் இந்த விழா நடைபெற்றது.

4 நாட்களும் மாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழா இரவு 11.30 மணி வரை நீடித்தது. இந்த விழாவில் பெண்கள், மாணவிகள் ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி ஊர்வலம் நடத்தினார்கள். ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். இந்த விழா பெண்களுக்கு மிகவும் தைரியம் அளிப்பதாக இருந்தது. இந்த விழாவுக்கான முயற்சிகளை மேற்கொண்ட மேத்யூ எம்.எல்.ஏ. கூறியதாவது:- பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அவர்களை வீட்டில் அடைத்து வைக்கக்கூடாது. அலுவலகம் செல்லும் பெண்கள், பணி நிமித்தமாக இரவில் வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான முன்முயற்சியாகத்தான் இரவில் பெண்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் வகையில் அழைப்பு விடுத்தோம். இந்த இரவு திருவிழா 4 நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பெண்களின் சுதந்திரத்துக்கான முதல் விதையை நான் தூவியுள்ளேன். கேரளா முழுவதும் பெண்கள் சுதந்திரமாக செல்வதற்காக இதுபோன்ற இரவு விழாக்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த திருவிழாவில் பங்கேற்ற மூவாற்றுப்புழா நகர மக்கள் கூறியதாவது:- பொதுவாக பெண்களை இரவு நேரத்தில் வெளியே செல்ல அனுமதிப்பது கிடையாது. இரவு 8.30 மணிக்குள் இங்குள்ள கடைகள் அனைத்துமே அடைக்கப்பட்டு விடும்.

இந்த திருவிழா காரணமாக முதல் முறையாக 4 நாட்கள் இரவு 11.30 மணி வரை மூவாற்றுப்புழா நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பெண்கள் பாதுகாப்பாக வெளியே சுற்றித் திரிந்தனர். 4 நாட்களும் இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, உணவுத்திருவிழாவும் நடத்தப்பட்டது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பெண்கள் இரவில் சுதந்திரமாக நடமாட இதுபோன்ற விழாக்களை தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!