தேர்தலை பிற்போட ஆணைக்குழு எதிர்ப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதனை பிற்போடுவதற்கு நாங்கள் இணக்கம் இல்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை மேற்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு இணக்கம் இல்லை. அதற்கு நாங்கள் எதிர்ப்பு.

அத்துடன் மாகாணசபைகள் இன்று அதிகாரிகளின் கீழே செயற்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டிய இடங்களில் அதிகாரிகளை நியமித்து நிர்வகிக்க ஆணைக்குழு இணக்கம் இல்லை. இன்று மாகாணசபை காணாமல் போயுள்ளது. அது காணாமல் ஆக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்தை தொடர்ந்து, உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ஜீஎல்.பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் நேற்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடிய போதே தேர்தல் ஆணைக்குவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!