கோட்டாபய பதவியேற்றவுடன் எடுத்த முதல் நடவடிக்கை! அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் பாரிய நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கி , அதற்கு பதிலாக பெருந்தொகை பணத்தை அச்சிட நடவடிக்கை எடுத்தார். இந்த தீர்மானமே எமது வீழ்ச்சிக்கான அடிப்படை காரணியாக அமைந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 
பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவை மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் அமையக் கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திலுள்ள விடயங்களே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது. 
பாரதூரமான நெருக்கடியில் இலங்கை

பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். தற்போது நாடு பாரதூரமான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதிலுள்ள நிபந்தனைகளே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஊழல் மோசடிகளால் நாட்டை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது மக்கள் மீது வரி சுமையை சுமத்துகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய   ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் பாரிய நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கி , அதற்கு பதிலாக பணத்தை அச்சிட நடவடிக்கை எடுத்தார். இந்த தீர்மானமே எமது வீழ்ச்சிக்கான அடிப்படை காரணியாக அமைந்தது. தற்போது இலங்கையில் உணவு பணவீக்கம் 94 சதவீதமாகும். உலகில் உணவு பணவீக்கம் அதிகமுள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறும் நாடு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை குறைந்தபட்சம் அரச நிதி தொடர்பான குழுவில் கூட இது தொடர்பில் முன்வைக்கப்படவில்லை.

எனினும் நாம் இது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுப்போம். யார் கூறுவதையும் கேட்காமல் செயற்பட்டு இன்று நாட்டை குறைந்த வருமானம் பெறும் நாடாக்கியுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிடவற்றிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வாதிகார வரி திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

பொருளாதார மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குபவையாக இருக்கக் கூடாது. பலவந்தமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது என்றார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!