அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்

இலங்கையில் அரச ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு, நட்சத்திர வகுப்பு உணவகங்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர வகுப்பு உணவகங்களில் உணவுகளை பெறுவது என்பது பல அரச நிறுவனங்களில் குறிப்பாக, கூட்டங்களின் போது நீண்ட காலமாக நடந்து வருகிறது.

எனினும் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது, புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சபைக் கூட்டங்களுக்கு நட்சத்திர வகுப்பு உணவகங்களில் இருந்து உணவு கொண்டு வருவதற்கு அதிகளவு பணம் செலவிடப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது. 

அத்துடன் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள வேளையில் இவ்வாறு பணத்தை வீணடிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!