காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞன்!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியின் மகள் விஷ்ணு பிரியா. இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இளம் பெண் விஷ்ணு பிரியாவும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் ஷியாம்ஜித்துக்கு விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்ட நிலையில், அவர் விஷ்ணுபிரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
    
நண்பனாக பழகி வந்த இளைஞனை காதலனாக விஷ்ணு பிரியா ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சியாம்ஜித் சுத்தியலால் தலையில் முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார். அதில் அந்த இளம்பெண் மயங்கி விழுந்த நிலையில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதிலும் வெறி அடங்காமல் கால்கள் இரண்டையும் கத்தியால் வெட்டி உள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகளை கண்ட தாயார் அதிர்ச்சியில் அலறியுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இளம்பெண்னின் செல்போனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது கொலை நடப்பதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு கடைசியாக அவர் ஒருவருக்கு போன் செய்து இருப்பது தெரிய வந்தது. அந்த போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது அந்த நபர் விஷ்ணு பிரியா தன்னை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு சியாம்ஜித் வந்துள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடைபெற்ற 3 மணி நேரத்தில் கொலை செய்த இளைஞன் ஷியாம்ஜித் தானாகவே முன்வந்து போலீசில் சரணடைந்தார். தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!