21வது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் நடைமுறை

அண்மையில் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 2022 ஆகஸ்ட் 10 அன்று அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது, ​​அதற்கு எதிரான மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நீதித்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இரண்டாம் வாசிப்பின் முடிவில் ஆதரவாக 179 வாக்குகள்

ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இரண்டாம் வாசிப்பின் முடிவில் ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.

அதன் பின்னர், குழுவின் போது திருத்தங்கள் இணைக்கப்பட்டதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன, இருபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு திருத்தமாக இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (31) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!