இலங்கைக்கு ஆதரவு – ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் ஆசிய மற்றும் பசிபிக் பிரிவின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பௌலா பம்பாலோனி(Paula Pambaloni) நேர்காணல் ஒன்றில் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும்

இலங்கையை ஆபிரிக்கா, கரீபியன் மற்றும் பசுபிக் நாடுகளின் அமைப்பில் இணைத்துக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதியின் தூதுவர் நிரஞ்சன் டி சில்வா தேவ ஆதித்யா (நிர்ஜ் தேவா) தெரிவித்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
பௌலா பம்பலோனியின், இந்த வலியுறுத்தல், இலங்கையின் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உட்பட இலங்கையின் உயர்மட்ட பிரமுகர்களுடனான பல சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை தனது ஜி.எஸ்.பி சலுகைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதா? என்ற கேள்விக்கு பம்பலோனி நேரடியான பதிலை வழங்கவில்லை.எனினும் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.


பயங்கரவாதத் தடை சட்டத்தை இடைநிறுத்துமாறு அழைப்பு

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற சக்தியைப் பயன்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இடைநிறுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கிறது.அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அது கோருகிறது என்றும் ராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. எனினும் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விரிவான பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் ஆசிய மற்றும் பசிபிக் பிரிவின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பௌலா பம்பாலோனி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!