பெரும் வல்லரசாக உருவெடுத்துள்ள சீனாவின் வளர்ச்சி கண்டு இந்தியாவின் கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்தியா தெற்காசியாவில் தன்னையொரு வல்லரசாக பாவனை செய்கின்றபோதிலும் சீனாவுக்கு இணையாக அந்த நாட்டைக் கூறமுடியவில்லை.
இன்றைய உலக அரங்கில், முக்கிய துறைகளில் உலகின் முதலாவது இடத்தை அமெரிக்கா கொண்டிருக்கின்றது. அதற்குப் போட்டியாக சீனா வளர்ந்து வருகின்றது. பொருளாதார பலத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைச் சீனாவே வகிக்கின்றது.
இராணுவ பலத்திலும் சீனா கணிசமான அளவு முன்னேறி யுள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையான இராணுவச் சிப்பாய் களை அந்த நாடு கொண்டுள்ளது. உலக சனத்தொகையில் சீனாவே முதலிடத்தை வகிக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
சிதறிப்போன ரஷ்ய கம்யூனிச வல்லரசு
கொர்பச்சேவ் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, சோவியத் யூனியனில் இணைந்திருந்த நாடுகள் சுதந்திரம் பெற்றுத் தனிநாடுகளாகப் பிரிந்து சென்றதன் பின்னர் ரஷ்யா மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
ஒரு காலத்தில் கம்யூனிசத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்த ரஷ்யாவில் இன்று கம்யூனிசத் தத்துவங்கள் செல்லாக் காசாகிவிட்டன. ஓரளவு ஜனநாயக முறைமையும் அங்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது. அரச தலைவரை, மக்கள் தேர்தல் மூலமாகத் தெரிவு செய்கின்ற வாய்ப்பு அங்கு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிலும் கலப்பு முறையிலான பொருளாதார முறைமை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பொருளாதாரத்தில் பெருவளர்ச்சி அடைவதற்கு அந்த நாட்டினால் முடிந்துள்ளது.
இன்னமும் சில ஆண்டுகளில் அமெரிக்காவை விஞ்சிவிடக்கூடிய ஆற்றலைச் சீனா பெற்றுவிடுமென்று கூறப்படுகின்றது. இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். ஆனானப்பட்ட அமெரிக்காவே சீனாவின் வளர்ச்சி கண்டு அஞ்சும்போது இந்தியாவினால் கவலைப்படாமல் இருக்க முடியாது.
அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்குச் சுமுகமான நல்லுறவு நிலவவில்லை
இந்தியாவின் அண்டை நாடுகள் அந்த நாட்டுடன் சுமுகமான உறவைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று தனி நாடாக உருவாகிய பாகிஸ்தான் இன்று இந்தி யாவின் பரம எதிரியாகத் திகழ்கின்றது.
இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதே பாகிஸ்தானின் வேலையாகப் போய்விட்டது.
இந்தியா தனது பாதுகாப்புத் தொடர்பாக கவலைப்படுவதற்கு பாகிஸ்தானின் நடவடிக்கைகளே முதன்மைக் காரணமாகும். மத ரீதியான பூசல் காரணமாக அந்நியரின் ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களும், இந்துக்களும் இந்தியாவில் எதிரிகள் போன்று செயற்பட்டனர்.
இதில் சிறுபான்மை யினராக இருந்த முஸ்லிம்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்ததன் காரணமாக இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி இந்து வெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் தனிநாடாக உருவான பின்னரும் இந்தப் பகையுணர்வு தொடரவே செய்தது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே போர்கள் இடம்பெற்றபோது சீனா, பாகிஸ்தானுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது.
அந்த நாட்டுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளையும் வழங்கி வந்துள்ளது. 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இடம் பெற்ற போரில் சீனாவுக்கு வெற்றி கிடைத்தது. இந்திய எல்லையிலுள்ள நிலத்தின் கணிசமான பகுதியைச் சீனா தன்வசமாக்கிக் கொண்டது.
இதை மீட்பதற்கு இந்தியாவினால் முடியவில்லை.சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாத்திரமே அந்த நாட்டினால் முடிந்து ள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட எவராவது அபகரிப்பதற்கு முற்பட்டால் அதற்காக மிகக் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டி நேரிடுமென சீனா அரச தலைவர் கூறியமை இந்தியாவுக்கான எச்சரிக்கை என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இதைவிட சீனாவின் பட்டுப்பாதைத் திட்டமும் இந்தியாவுக்கு எதிரானதே என்பதில் சந்தேகமில்லை. இதில் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிக ளும் இடம்பெற்று வருகின்றன.
தென்னாசிய வட்டகையில் இந்தியாவுக்குச் சவாலாக உருவெடுத்துள்ள சீனா
ஏற்கனவே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைத் தன்வசமாக்கிக் கொண்ட சீனா, கொழும்புத் துறைமுக நகர்த்திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது. இவற்றைவிட பெருமளவு கடன் தொகையை வழங்கி இலங்கையை நிரந்தரக் கடனாளி நாடாக்கிவிட்டது.
காலப் போக்கில் ராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடமிருந்து இலங்கை தூரச் செல்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இது இந்தி யாவுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது.
சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆயுட்காலம்வரை அந்தப் பதவியில் தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக சீனாவின் கொள்கைகளை அவரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு முடியும். ஆனால் இந்தியாவில் அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை.
அரசுக்குத் தலைமை தாங்குபவர்கள், மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றனர். இதனால் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளிலும் காலத்துக்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சீனாவுக்குச் சொந்தமான உலங்கு வானூர்த்திகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா குற்றம் சாட்டுகின்றது. ஆனால் சீனா இதையொரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிலவேளை இந்தியாவைச் சீண்டுகின்றதொரு முயற்சியாகவும் இது இருக்கலாம். இந்தியாவும் தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடிக்குமென எதிர்பார்க்க முடியாது. இறுதியில் சீன – இந்தியப் போர் மூண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்தியா கூடப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. தொழில்நுட்பத் துறையில் அதன் வளர்ச்சி அபரிமிதமானது. ஆனால் மக்கள் தொகைப் பெருக்கம் அந்த நாட்டுக்குப் பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
எது எவ்வாறு இருந்த போதிலும் சீனாவை எதிர்த்து நிற்கக் கூடிய வல்லமை இந்தியாவுக்குக் கிடையாது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். – Source: uthayan