இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு செயலணி பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 சிறுவர் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

நாட்டில் தொழுநோயாளிகள் அதிகரிப்பதற்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர்கள் அடையாளம் காணப்படாமையே காரணம் எனவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத தொழுநோயாளிகள் சுற்றித் திரியும் சூழ்நிலை காணப்படுவதால், அவர்களைக் கண்டறிந்து சிகிச்சைக்காக அனுப்பும் வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.எம்.ஐ.கே.வன்னிநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 13 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!