சுமந்திரன், சாணக்கியனை மீன் விற்கச் செல்லுமாறு கூறிய ஈபிடிபி எம்.பி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோரை மீன் விற்பதற்கு செல்லுமாறு ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சபையில் தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை 2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே திலீபன் இவ்வாறு ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு முன்னர் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி.சில்வாவுக்குமிடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சாணக்கியன் உரையாற்றுவதற்கான நேரம் முடிவடைந்ததையடுத்து அடுத்ததாக வன்னி மாவட்ட உறுப்பினர் திலீபனை உரையாற்றுமாறு சபைக்கு தலைமை தாங்கிய வீரசிங்க வீரசுமண அழைத்தார். ஆனால் திலீபன் பேச முடியாதவாறு சாணக்கியன் சபையில் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தினார்.

இதனால் பாளுமன்ற உறுப்பினர் திலீபன் பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சாணக்கியன் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்கு சபைக்கு தலைமை தாங்கிய வீரசிங்க வீரசுமண அனுமதி கொடுக்காததால் சுமந்திரன் சாணக்கியனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இவ்வாறு சபைக்கு தலைமை தாங்கிய வீரசிங்க வீரசுமண, சாணக்கியன், சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டதால் தனது உரையை ஆரம்பிப்பதும் பின்னர் நிறுத்துவதுமாக திலீபன் தடுமாறி கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த திலீபன் ”ஐயோ.. இது என்ன மீன்கடையா…? தயவு செய்து கத்தாதீர்கள். மீன் கடையில் கத்துவது போல் கத்துவது என்றால் பேசாமல் இருவரும் மீன் விற்க போங்கள்” என்றார். இதன் பின்னர் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரை அமைதிப்படுத்திய சபைக்கு தலைமை தாங்கிய வீரசுமன வீரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் உரையாற்றுவதற்கு வழியேற்படுத்தி கொடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!