அமைச்சரவை விரிவாக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

வரவு செலவுத் திட்டம் தொடர்பான சம்பிரதாயங்கள் முடியும் வரை அமைச்சரவை விரிவாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதும், அமைச்சரவையை விரிவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதன்போது தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை உள்ளீர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா உட்பட்ட நாடுகள், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், அரசியல் ஸ்திரத்தன்மையையும் கோரி வருகின்ற நிலையிலேயே ரணில் தலைமையிலான அரசாங்கம் இந்த குறுக்கு வழியில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும் இதனை மையமாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியம் இந்த டிசம்பரில், இலங்கைக்கான நிதியுதவி குறித்து தமது நிறைவேற்றுக்கூட்டத்தில் ஆராயாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாறாக எதிர்வரும் மார்ச் மாதம் இது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதற்கு முன்னதாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்துக்கு சீனா உடன்பட வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ள நிலையில் சீனா, இன்னும் அதன் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!