கனடாவில் இலங்கை இளைஞர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர் மீது மேலதிகமாக 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையரான 21 வயது இமேஷ் ரத்நாயக்க என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைதானவர். இவர் மீது துஸ்பிரயோகம், பாலியல் குறுக்கீடு மற்றும் சிறார் ஆபாச படத்தை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டது.
    
மேலும், 11 முதல் 13 வயதுடைய சிறார்களை இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. மட்டுமின்றி, மோரின்வில்லே மற்றும் எட்மண்டன் பகுதியில் அவர்களை சந்தித்துக் கொண்டதாகவும் தெரியவந்தது. அத்துடன் 2021 செப்டம்பர் மற்றும் 2022 ஜூன் மாதங்கள் வரையில் இவர் சிறார்களுடன் நெருக்கமாக இருந்துள்ளதும் அம்பலமானது. ஆனால், ஜூலை மாதத்தில் கைதான இமேஷ் ரத்நாயக்க நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் டிசம்பர் 9ம் திகதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக் கைதியாக உள்ளார். மேலும், இமேஷ் ரத்நாயக்க என்பவரால் 100 சிறார்கள் வரையில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அல்பர்ட்டா விசாரணை அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ள காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையிலேயே 100 சிறார்களுக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எட்மண்டன் பிராந்தியத்தில் உள்ள பெற்றோர்கள் இந்த வழக்கை தங்கள் குழந்தைகளுடன் விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் ரத்நாயக்காவை எப்போதேனும் தொடர்புகொண்டார்களா அல்லது சந்தித்தார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இமேஷ் ரத்நாயக்க சமூக ஊடகங்களில் பல பெயர்களில் உலவியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், islandsauce0129, monked.ruffy, Matt Wintoni உட்பட குறிப்பிட்ட புனைப்பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறார்கள் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!