மக்கள் பட்டினியில் நத்தாரை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது

நாட்டு மக்கள் பட்டினியில் இருக்கும் போது இம்முறை நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். களுத்துறை சிறி குருஸ கல்லூரியில் நேற்று நடைபெற்ற “எதிர்பார்ப்பின் பிறப்பு” என்ற நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சியின் பின்னர் கருத்து வெளியிடும் போது பேராயர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவை சாப்பிடாது பட்டினியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், நாடு இந்தளவு அழிந்து போயுள்ள நிலையில், எமக்கு மகிழ்ச்சியாக நத்தாரை கொண்டாட முடியாது. ஆட்சியாளர்களின் மோசமான செயல்கள் காரணமாகவே நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சென்று பிச்சை எடுப்பவர்கள் போல், சாப்பிடவும குடிக்கவும் கேட்கின்றனர்.

இப்படியான அழகான கவரக்கூடிய நாட்டில் வாழ்ந்துக்கொண்டு, பிச்சைக்காரர்களை போல் சாப்பிடவும் குடிக்கவும் வழங்குமாறு உலக நாடுகளின் கேட்பது குறித்து வெட்கப்பட வேண்டும். இது எப்படியான மனோபாவம்?. நாட்டின் ஆட்சியாளர்களே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம்.

நத்தார் என்பது பட்டாசு, உணவு,பானங்கள், சோடிப்புகள் அல்ல. பெற்றுக்கொள்வதை விட பிறருக்கு கொடுப்பதே நத்தாரில் முக்கியமானது. இதனால், இம்முறை உங்களது பிரதேசத்தில் சாப்பிட முடியாமல் இருக்கும் ஒரு வறிய குடும்பத்திற்கு உதவி நத்தாரை கொண்டாடுங்கள். இதனையே யேசு கிறிஸ்து போதித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் மாட்டு தொழுவதில் பிறந்தார் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!