சீனாவை புரட்டியெடுக்கும் கொரோனா: மலைப்போல் குவியும் சடலங்கள்!

சீனாவில் கொரோனா தொற்று தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஊகான் மகாணத்தில் தொடங்கிய கொரோனா பரவல் என்பது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் இழப்புகளை கொடுத்தது. இந்த கொரோனா பெருந்தொற்று உலகத்தை 3 ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது.
    
தற்போது தான் உலக நாடுகள் இந்த நோய் தொற்றில் இருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளால் மீண்டும் பீதி அடைந்துள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் 1 முதல் 20 ஆம் திகதி வரை 24 கோடியே 80 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் வெளியாகி உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனிடையே கொரோனா பெருந்தொற்றால் தினமும் 9 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மற்ற நாடுகளான அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட நாடுகளும் புதிய விதிமுறைகளை பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் என்பது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!