மத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை! நீதி அமைச்சர் உறுதி

வடக்கு, கிழக்கின் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும், சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனித தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் கடும் கண்டனங்களை நேற்று சபையில் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்னவெனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பதிலளிக்கும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், புனித தலதா மாளிகை என்பது இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல உலகம் முழுவதும் வாழும் பௌத்த மக்களின் அடையாளம். எனவே, தலதா மாளிகையை அவமதிக்க, இந்த உலகில் எவருக்கும் உரிமை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சேபால் அமரசிங்க என்பவர் மிகவும் வெட்கக்கேடான வகையில் தலதா மாளிகையை அவமானப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, பௌத்த உயர்பீடமும்,பௌத்த மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை அரசமைப்பின்படி ஒருவர், தம்மை நாத்திகன் என்று கூற உரிமை உண்டு. அதனை நாம் தடுக்கப்போவதில்லை. தாம் ஒரு சித்த சுயாதீனமற்றவர் என்று கூறவும் அவருக்கு உரிமை உண்டு.

அதிலும் யாரும் தலையிட முடியாது எனினும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். இது ஒரு சமூக விரோதக் குழுவின் செயற்பாட்டை ஒத்ததாக உள்ளது. அத்துடன் இது குற்றவியல் சட்டம், பிரிவு 290 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றகும். இதனடிப்படையில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்தல், மத நிந்தனை என்பவற்றுக்கு 10 வருட கடூழியச் சிறைத் தண்டனையையும் விதிக்க முடியும்.

எனவே, வடக்கு கிழக்கின் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும் இந்தத் தருணத்தில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயலுவோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அந்தவகையில் தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல, சேபால் அமரசிங்க என்ற குறித்த நபர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் கூட்டுத்தாபனம் ஒன்றின் தலைவராக இருந்தார்.

எனவே இது அரசாங்கத்தின் ஒரு கிளர்ச்சி முயற்சியாக இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனை மறுத்த அமைச்சர் மகிந்த அமரவீர, அப்படியான ஒருவர் எந்தவொரு கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் செயற்படவில்லை. அவர் பதவி வகித்திருப்பின் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அவருக்குக் காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்பு இருக்கலாம் என்பதே எனது கருத்து என தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!