கூட்டமைப்பின் நிலை- விரைவில் அறிவிப்பேன் என்கிறார் சம்பந்தன்!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் ஆகியவற்றை விரைவில் உத்தியோக பூர்வமாக அறிவிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையினர் தனிவழியில் செல்வதற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் இறுதி முடிவு என்னவென்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் இம்முறை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக முகங்கொடுக்க வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதுதொடர்பில் பங்காளிக்கட்சிகளுடன் நாம் நீண்ட நேரம் ஆராய்ந்திருந்தோம். அதனால் ஏற்படுகின்ற சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தோம். இந்நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக அந்தந்தக் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு நான் அவசரப்படவில்லை. அதுகுறித்து விரைவில் உத்தியோக பூர்வமான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!