மாட்டுப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடிய விவசாயிகள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டுப்பொங்கல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உழவுத்தொழில் மற்றும் வண்டி இழுக்கும் தொழிலுக்கு பயன்படுத்தும் காளை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஏராளமான விவசாயிகள் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய மாடுகளை நன்றாக குளிப்பாட்டி அதன் நெற்றில் சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்தனர்.
    
இதைத்தொடர்ந்து மாடுகளின் கொம்புகளுக்கு பல வண்ண நிற பெயிண்டுகளால் வர்ணம் தீட்டினர். மேலும் பலர் மாடுகளின் கொம்புகளில் கட்சி கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்தனர். அதுமட்டுமின்றி மாட்டு வண்டிக்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் உள்ள மாட்டு கொட்டகையில் உழவுத்தொழிலுக்கு பயன்படும் ஏர் கலப்பை, மண்வெட்டி உள்பட பல விவசாய பொருட்களை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அதில் சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் பொட்டு வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

ஈரோட்டில் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் விரதம் இருந்து, தங்களுடைய மாட்டு கொட்டகையில் சாணத்தால் தெப்பம் கட்டி அதில் பாலை ஊற்றி மண்டியிட்டு குடித்தனர். இதைத்தொடர்ந்து சர்க்கரை பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் விவசாயிகள், மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு, பழம் போன்றவற்றை ஊட்டி மகிழ்ந்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்தும் விவசாயிகள் மாட்டுப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடினார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!