பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண பட திரையிடலுக்கு எதிர்ப்பு!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா – மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிபிசியின் ஆவண படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. என்றாலும், பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவண படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதள பதிவுகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

இதனிடையேதான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இடதுசாரி ஆதரவு மாணவர்கள் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பெரிய திரையில் பார்க்க ஏற்பாடு செய்தனர். அவர்கள்மீது கல்லெறிந்தது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் என்று மாணவர் சங்க முன்னாள் தலைவர் என் சாய் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து ஜேஎன்யு மாணவர்கள் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். பின்னர் காவல்நிலையத்துக்கு எதிரே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவ ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!