இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் : கனடா

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என ஐ.நா அமர்வில் கனடா பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்யுமாறும்  கனடா முன்மொழிந்துள்ளது.

ஜெனிவாவில் இன்று (01.02.2023) இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய முன்வந்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஐ.நா சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால் ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தடவையாகவும் 2012ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் 2017ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017ஆம் ஆண்டு நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் விரிவான ஆலோசனைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அறிக்கை தயாரிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 75வது சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீளாய்வுக்காக வீடியோ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கம் சுயமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தும் விதம் குறித்தும் அலி சப்ரி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!