யாழ். மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகம் அதிகரிக்கின்றமையால் அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நாளை மறுதினம் (04.02.2023) வரை இந்த மழை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதுமாக கரையைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ வேகத்தில் வீசுகின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம். இதனால் வடக்கு மக்கள் தொடர்ந்து அவதானமாக இருப்பது அவசியம் எனத் என்.சூரியராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!