20 பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சாதக, பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த, மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும் அது வடக்கு, கிழக்கில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தும், அதனை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதக விடயங்கள் தொடர்பில் சமூகமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிவதற்காகவே மதத் தலைவர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த குழு இன்று (07.02.2023) கியூடெக் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளது.
அதன் பின்னர் 4 மணிக்கு வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கில் செயற்படும் அரச அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதோடு மத தலைவர்களையும் தனித்தனியாக சந்திக்க உள்ளதாகவும் யாழ்ப்பாண சர்வ மத குழுவின் இணைப்பாளர் அருட்தந்தை டிக்சன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!