பிரபாகரனை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சியாம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார என்ற செய்தி தமிழ் அரசியல் கட்சிகளால் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம். என்றாலும் இதனை இராணுவம் மறுத்துள்ளது. மீண்டும் பிரபாகரன் தலைதூக்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
    
சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்தியாவில் தமிழ் நாட்டைச்சேர்ந்த நெடுமாரன் தெரிவித்திருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் தெரிவித்தார் என்று எமக்கு தெரியாது. என்றாலும் பிரபாகரன் உயிராேடு இல்லை என்பதை எமது இராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

என்றாலும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல் வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் மீண்டும் பிரபாகரன் தலைதூக்கப்போவதில்லை. அதேநேரம் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு இவ்வாறான செய்தியை பரப்புவதாக தெரிவிக்க முடியாது. ஏனெனில் 13ஆம் திருத்தம் எமது அரசியலமைப்பில் இருக்கும் விடயமாகும்.

மேலும் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாடு பிளவுபடாது என 1987இல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருகிறது. அன்று மிகவும் பயங்கரமான நிலைமையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. பிரபாகரன் பெரும் செல்வாக்குடன் இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணம் பிரபாகரனின் ஆதிக்கத்துக்கு கீழே இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையே இருக்கிறது.

வடக்கு,கிழக்கு மாகாணம் இணைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அங்குள்ள சிங்கள முஸ்லிம் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். அத்துடன் மாகாணங்களுக்கு பொலிஸ். காணி அதிகார வழங்கப்பட்டுள்ளபோதும் நிதி அதிகாரம் வழங்கப்படவில்லை. நிதி அதிகாரம் இல்லாமல் சமஷ்டி ஆட்சியை மேற்கொள்ள முடியாது.

இந்தியாவில் சமஷ்டி முறையே இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாகாண முறையே இருக்கிறது. அதனால் மாகாண அதிகாரங்கள் அரசியலமைப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மாகாணங்களுக்கு பொலிஸ். காணி அதிகாரங்களை வழங்குவதன் மூலம் நாடு பிளவுபடப்போவதில்லை. 13ஐ முழுமையாக அமுல்படுத்தப்போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!