சீனாவின் உறுதிமொழியின்றி கடன் வழங்கத் தயாராகும் சர்வதேச நாணய நிதியம்..!

சீனாவின் உறுதிமொழியின்றியே இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல சர்வதேச ஆங்கில ஊடகமான புளும்பர்க் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவின் நிதி குறித்த உறுதிமொழிகள் இன்றியே இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான சாத்தியங்கள் சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உரிய உறுதிமொழிகள் வழங்கப்படாத சந்தர்ப்பங்களில் குறித்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு ஓர் நாடு மெய்யாகவே அர்ப்பணிப்புடன் செயற்படும் பட்சத்தில் அதன் அடிப்படையில் சில சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எந்த அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்கப்படும் என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என சர்வதேச நாணய நிதிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்புக்களிடம் உத்தரவாதம் பெற்றுக்கொள்வதற்கு பூரண முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!