கிலோ ரூ.2க்கு ஏலம் போன வெங்காயம்: விவசாயிகள் போராட்டம்!

மராட்டியத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் நேற்று காலை வெங்காய ஏலம் தொடங்கியது. வெங்காயம் கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம் போனது. வெங்காயம் அடிமாட்டு விலைக்கு ஏலம் போனது விவசாயிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் விலை வீழ்ச்சியை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மராட்டிய மாநில வெங்காய உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தலைமையில் விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தினர். இதனால் நாசிக் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஏலத்தை நிறுத்தியது குறித்து வெங்காய உற்பத்தியாளர் சங்க தலைவர் பாரத் திகோலே கூறுகையில், “தற்போது நடந்து வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், ஒரு குவிண்டால் வெங்காயத்தை ரூ.1,500-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதாக அரசு அறிவிக்க வேண்டும். தற்போது கிலோ ரூ.3, 4, 5-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.15-20 வரை தர வேண்டும். எங்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்படவில்லை எனில், நாசிக் லசல்காவ் மார்க்கெட்டில் ஏலம் தொடங்காது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!