சிறுவர்களின் கல்வியை பறித்த கோவிட் – வெளியான அறிக்கை

கோவிட் தொற்று அச்சத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக இலங்கை கல்வித்துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

கோவிட் -19 பரவல் காரணமாக பொதுமுடக்க காலத்தில் பாடசாலைகள் நடத்தப்படாமையால் இலங்கையில் குழந்தைகளின் கல்வி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறித்த அறிக்கையின் படி, மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது எண்ணியல் (எண்களை கூட்டுதல், கழித்தல் போன்ற) திறன்களில் பின்தங்கியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தை கண்டறிய கல்வி அமைச்சகம் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியது. இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய 1,009 பாடசாலைகளில் இருந்து சுமார் 10,000 மூன்றாம் தரப் பிள்ளைகள் இதற்காக பங்குபற்றியுள்ளனர்.

கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், எண்கள் மற்றும் அடிப்படை கணித அறிவு உள்ளிட்ட பல துறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 90 சதவீத குழந்தைகளால் போதிய கல்வியறிவு அல்லது எண்ணியல் திறன் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 27 சதவீதம் பேர் மட்டுமே விடயமொன்றை செவிமடுக்கும் திறனைப் பெற்றுள்ளனர். அந்தத் திறனில் 73 சதவீத குழந்தைகள் தோல்வியடைந்துள்ளனர். 

பேசும் திறனை எதிர்கொண்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், 80 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 37 சதவீதம் பேர் படிக்கும் திறனையும், 34 சதவீதம் பேர் மட்டுமே எழுதும் திறனையும் கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் எண் அறிவுத் தேர்வில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் 26 வீதமான சிறுவர்களுக்கு இணையவழிக் கல்வி வசதிகள் கிடைக்கவில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!