பயங்கரவாதத்தில் ஈடுபடவுள்ளவர்களே எதிர்க்கிறார்கள்!

எதிர்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத செயற்பாடுகளில் எவரும் ஈடுபடாவிட்டால், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கண்டு அச்சமடைய தேவையில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். இதன் காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சிறு குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சிறைக்கு அனுப்பாமல், உரிய பாதுகாப்பு தரப்பினர் ஊடாக அவர்களை கண்காணிக்கும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறு குற்றங்களுக்காக சிறை செல்பவர்கள் சிறையில் இருந்து வெளியில் வரும்போது பாரதூரமான குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபராக மாறிவிடுகிறார்கள். இந்நிலையை மாற்றியமைப்பதற்காகவே சட்டத்தை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலம் ஏப்ரல் மாதத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதம் எப்போது தோற்றம் பெறும், எப்போது வெளிப்படும் என்பதை சோதிடத்தால் கணிக்க முடியாது. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்படும்.

ஒன்றில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நாடு சீரழியட்டும் என்று எண்ணிக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். இவ்விரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மறுசீரமைக்கும் யோசனைகளை எதிர்தரப்பினர் முன்வைத்தால் அதனை மீளாய்வு செய்வோம்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை புலம்பெயர் அமைப்புக்களும், அரசாங்கமும் தீர்மானிக்க முடியாது. உயர் நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. ஆகவே, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விடயங்களை உள்ளடக்கியுள்ளது என சவாலுக்குட்படுத்தி நாட்டு மக்கள் எவரும் உயர் நீதிமன்றத்தை நாட முடியும். அதற்காக சட்டத்தரணிகளை அணுகுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!