அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிக்க வேண்டும்: சுமந்திரன்

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்ட மூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (01.04.2023 ) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம்.
எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில், எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.

இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் எனக் கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது. குறித்த சட்ட மூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்ட மூலத்தைப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.


புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்ட மூலத்தைத் தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும். நாங்கள் குறித்த சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதற்குச் சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்துப் பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம். ஆகவே, ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!