சர்வதேச நியமங்களைப் பூர்த்தி செய்யாத பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்!

இலங்கையில் இனப்பிரச்சினையற்ற, மதச்சார்பற்ற ஸ்திரமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், அதற்கு இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் தொடரவேண்டியது அவசியமாகும் என்று இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) வலியுறுத்தியுள்ளது.
    
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடுமையான மனித உரிமைகள்சார் தேவைப்பாடுகள் பூர்த்திசெய்யப்படாத போதிலும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாகவும் அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது.

இருப்பினும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கடந்த 6 வருடங்களாக இலங்கைக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைகள் மற்றும் ஆதரவு என்பன முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாறாக சர்வதேச நியமங்களைப் பூர்த்திசெய்யாத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே நாட்டில் இனப்பிரச்சினையற்ற, மதச்சார்பற்ற ஸ்திரமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் தொடரவேண்டியது அவசியமாகும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!