எந்திரத்தால் தலையை துண்டாக்கி தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி!

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்துக்கு உட்பட்ட விஞ்சியா கிராமத்தை சேர்ந்தவர் ஹெமுபாய் மக்வானா (வயது 38). இவரது மனைவி ஹன்சாபென் (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இருவரும் ஒரு குடிசையிலும், அவர்களது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டிலும் வசித்து வந்தனர். தம்பதியர் கடந்த ஓராண்டாக அந்த குடிசையில் பூஜை செய்து வந்துள்ளனர். நேற்று காலையில் அந்த குடிசையில் இருவரும் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தனர்.
    
இது குறித்து தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சித்தகவல் வெளியானது.அதாவது தம்பதியர் இருவரும் தங்களது தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதற்காக பிரத்யேக எந்திரம் ஒன்றை உருவாக்கி குடிசையில் வைத்திருந்தனர்.

பின்னர் ஹோம குண்டம் வளர்த்து அதில் தங்கள் தலை உருண்டு விழும் வகையில் எந்திரத்தின் கயிற்றை இழுத்து தலையை வெட்டியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு குண்டத்தில் விழுந்துள்ளது. இதை தெரிவித்த போலீசார், தம்பதியர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!