71,000 விவசாய குடும்பங்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!

ஏழு மாவட்டங்களில் உள்ள 71,000 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை விநியோகிக்க உள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) இணைந்து யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஒன்று இன்றைய தினம் (21.04.2023) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வின்போதே குறித்த அறிவிப்பினை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து இவ்வருடம் விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை விவசாய அமைச்சுக்கு வழங்கியுள்ளன.

இதன்படி, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ½ ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் சுமார் 71,000 விவசாயக் குடும்பங்கள் இந்த இலவச யூரியா உரத்தை விநியோகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக விளைச்சலைப் பெற புதிய செய்கை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாராசூட் நெல் செய்கை முறையை ஊக்குவிப்பதற்கு நெல் விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்கத் தேவையான ஆதரவையும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!