சிறை செல்வதை தவிர்க்க மைத்திரி தேசிய அரசில் இணைய முயற்சி!

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக அக்கறை கொண்டுள்ளார். ராஜிதவுக்கு முன்னதாகவே மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
    
நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் தெரிவு செய்தார்கள். பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அமைச்சு பதவிகள் இல்லாமல் உள்ளார்கள்.

10 இற்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை முப்பதை காட்டிலும் அதிகரிக்க வேண்டுமானால் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கி அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க அதிக அக்கறை கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு முன்னதாகவே மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைவார். தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பளிக்காமல் சந்தர்ப்பத்துக்கு அமைய செயற்படும் அரசியல்வாதிகளை இணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அது நிலையற்றதாக அமையும். மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!