“மதுவை திராவிட பண்பாடாக மாற்றிய திமுக” – கொந்தளித்த சீமான்!

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அரசாணை வெளியாகியிருக்கிறது. அரசின் இத்தகைய அறிவிப்புக்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

அதேசமயம் அமைச்சர் செந்தில்பாலாஜி, “சர்வதேச விளையாட்டுகள் தமிழ்நாட்டில் நடக்க வேண்டுமானால் இந்த அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதேபோல, திருமண மண்டபங்களில் திருமணம், மற்ற நிகழ்ச்சிகளில் மதுபானம் பயன்படுத்த அரசு எப்போதும் அனுமதிக்காது” என அரசு தரப்பிலிருந்து விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டைச் சீரழிக்கும் முடிவை தி.மு.க அரசு திரும்பப்பெற்று மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது வழங்க அனுமதி அளித்து தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மதுவையே முதன்மை வருமானமாக நம்பி அரசை நடத்தும் தி.மு.க அரசு, தற்போது திருமண மண்டபங்கள் வரை மது விற்பனையை விரிவுபடுத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று கடந்த காலங்களில் கூறிய தி.மு.க, ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் மது விற்பனையை மேலும் பல்லாயிரம் கோடிகள் அதிகரிக்கப் புதுப் புது முயற்சிகளை எடுத்து தீவிர திட்டங்களைத் தீட்டிவருகிறது. இந்தியாவிலேயே இலக்கு வைத்து மதுவிற்பனை செய்யும் ஒரே மாநிலம் திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழ்நாடு மட்டுமேயாகும். அதிக லாபம் ஈட்டும் அரசு நிறுவனமாக டாஸ்மாக்கை மாற்றியிருப்பதுதான் திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் சாதனை.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குவதற்கு 7,000 கோடிகளை ஒதுக்குவதாக அறிவித்திருக்கும் தி.மு.க அரசு, அதை ஈடுகட்ட டாஸ்மாக் வருமானத்தை 45,000 கோடிகளிலிருந்து 50,000 கோடிகளாக அதிகரித்துக் கோடிக்கணக்கான பெண்களின் குடும்பத்தைக் காவு வாங்க திட்டமிட்டிருக்கிறது. அதற்காக மதுக்கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, பார்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி, பெண்களுக்குத் தனி பார் வசதி என அனைத்துச் சீரழிவு முயற்சிகளையும் வேகவேகமாக முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், சாலை விபத்துகள், இளம் வயது மரணங்கள், இளம் விதவைகள், அதிகரிக்கும் நோய்த்தொற்றுகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவை அதிகரிக்கவும், சமூகமே குற்றச்சமூகமாக மாறி சட்டம்-ஒழுங்கு சீரழியவும் முதன்மைக் காரணம் திராவிட அரசுகள் விற்கும் மதுதான். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க தி.மு.க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தபோது, மது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா… என்ற எனது நெடுநாள் கேள்விக்கு இன்றுவரை தி.மு.க அரசிடம் பதில் இல்லை.

மது விற்பனை மூலம் வரும் வருமானம் தொழுநோயாளி கையில் வழியும் வெண்ணெய்க்குச் சமம் என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் வழிவந்தவர்கள் அந்த வெண்ணெயை விற்றுதான் ஆட்சி நடத்தமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். எத்தனை குடும்பங்கள் சிதைந்தாலும் பரவாயில்லை, இளைய தலைமுறையினர் சீரழிந்தாலும் பரவாயில்லை, எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை தாங்கள் நடத்தும் மதுபான ஆலைகள் வளம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் திராவிட ஆட்சியாளர்களால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவை நோக்கிச் செல்கிறது.

தீயப் பழக்கமாக இருந்த மதுவை, திராவிடப் பண்பாடாகவே தி.மு.க அரசு மாற்றி நிறுத்தியிருப்பது வெட்கக்கேடானது. இதுதான் உலகம் வியக்கும் தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியா… மக்கள் நலப்பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களையும், காவல்துறை ஆணையர்களையும் மது விற்பனைக்கு அனுமதி வழங்கும் தரகர்கள்போல மாற்றியிருப்பது மக்களாட்சிக்கே ஏற்பட்ட மாபெரும் தலைகுனிவாகும்.

பேருந்துகள் தனியார் மயம் என்று அறிவிப்பு வெளியிடுவது பிறகு எதிர்ப்பு கிளம்பியதும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அதை மறுப்பது, அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் என்று அறிவிப்பது, பின்னர் கல்வித்துறை அமைச்சர் அதை மறுப்பது என்று முன்னுக்குபின் முரணாகப் பேசி மக்களைக் குழப்பிவிட்டு, குறுக்கு வழியில் அதை நடைமுறைப்படுத்துவதுபோல், திருமண மண்டபங்களில் மது விற்பனை என்று அறிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அமைச்சர் ஒருவர் அதை மறுப்பது தி.மு.க-வின் வழக்கமான ஏமாற்றுத் தந்திரமே அன்றி வேறில்லை.

ஆகவே, திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது விற்பனை செய்யப்படும் என்ற தமிழ்நாட்டைச் சீரழிக்கும் முடிவை தி.மு.க அரசு திரும்பப்பெறுவதோடு, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!