வலியில்லாமல் மரண தண்டனை நிறைவேற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கில் கைதிகள் தூக்கில் இடப்படும் முறையை மாற்ற வேண்டும் எனவும், வலியற்ற முறையில் மரண தண்டையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தூக்கில் தண்டனையை நிறைவேற்றும் போது ஏற்படும் வலி, உயிர் பிரிவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் உள்ளிட்ட அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இது சம்பந்தமாக சர்வதேச நாடுகளில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் இது குறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!