தையிட்டி விகாரைக்கு எதிராக இரவிரவாகப் போராட்டம்!

வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று மாலை தொடங்கிய போராட்டம் இரவிரவாக இடம்பெற்றது.
    
நேற்றிரவு போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
மேலும் குறித்த பகுதிக்குள் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்திருந்ததுடன், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுகூடியதுடன், பதற்றமான சூழல் நிலவியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!