ஹம்பாந்தோட்டையை சீனா போருக்குப் பயன்படுத்த முடியாது!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு யுத்தத்துக்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ சீனாவினால் பயன்படுத்த முடியாது என்றும் சீனாவுடனான இலங்கையின் உடன்படிக்கை மிகவும் தெளிவாக உள்ளது என்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
    
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, இந்தியா மற்றும் அமெரிக்காவைக் கையகப்படுத்த கூறியதாகவும் பின்னர், சீனர்கள் வந்து அதைக் கைப்பற்றினார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சீனாவுடனான ஒப்பந்தம் தனியார்மயமானது என்றும் வர்த்தகத்துக்கு மட்டுமே துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது அதில் தெளிவாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தங்களிடம் மிகவும் நட்பு ரீதியான உறவு உள்ளது என்றும் வலியுறுத்திய அமைச்சர், கொழும்பின் வலுச்சக்தி துறையை கட்டியெழுப்புவதற்கு புதுடெல்லி உதவுகிறது என்றார்.

திருகோணமலை துறைமுகத்துக்கு வந்து பெறுமதி சேர்ப்பதற்காக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கொழும்பு துறைமுகத்தில் அதானியின் முதலீடு குறித்தும் நம்பிக்கை தெரிவித்தார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!