மகன் இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் வசித்து வந்த தாயார்!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் மகன் இறந்தது கூட தெரியாமல், அவரது தாய் இரண்டு நாட்கள் வீட்டிலேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்த உமா சங்கர்(45) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே அவரிடமிருந்து பிரிந்து சென்றுள்ளார்.
    
இந்த நிலையில் அவர் தனது தாயார் ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாத நிலையில், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் உமா சங்கர் படுக்கையில், சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர். பின்னர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் உடல் கூராய்விற்கு அனுப்பியுள்ளனர்.

இந்த உடல் கூராய்வில் உமா சங்கர் இரண்டு நாட்களுக்கு, முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே உமா சங்கரின் தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் மகன் இறந்தது கூட தெரியாமல், வீட்டில் உண்ண உணவு கூட இல்லாமல் சடலத்துடன் இரண்டு நாட்கள் வசித்து வந்தது, அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார் உமா சங்கர் இறந்ததற்கான காரணத்தை பற்றி அறிய, கூடுதல் விசாரணை செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!