பிரேசில் அழகி போட்டியில் பங்கேற்ற மனைவி: போட்டி மேடையில் கணவர் செய்த செயல்!

மிஸ் பிரேசில் போட்டியில் மனைவிக்கு 2ம் இடம் கிடைத்த ஆத்திரத்தில் அவரது கணவர் வெற்றியாளரின் கீரிடத்தை கீழே போட்டு உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான மிஸ் பிரேசில் அழகி போட்டி சமீபத்தில் நடைபெற்றது, பல கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி என்ற இரண்டு பேர் தேர்வாகினார்கள்.
    
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் எமானுவெலி பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கான வெற்றி கிரீடம் அவரது தலையில் சூட்டப்பட இருந்தது. ஆனால் அப்போது திடீரென போட்டி மேடைக்கு ஏறிய இரண்டாம் இடம் பிடித்த நதாலி பெக்கரின் கணவர், எமானுவெலி பெலினி-க்கு சூட்டப்பட இருந்த மிஸ் பிரேசில் கீரிடத்தை பிடுங்கி தரையில் வீசினார்.

மேலும் கீழே விழுந்த கீரிடத்தை எடுத்து மீண்டும் தரையில் போட்டு உடைத்தார், இதை கண்டு நடுவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மேடைக்கு ஓடி வந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை உடனடியாக மேடையை விட்டு கீழே இறக்கினர்.

அப்போது நதாலி பெக்கரின் கணவர், நடுவர்கள் சரியான முடிவை எடுக்கவில்லை எனவே கோபத்தில் அவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சரியான முறையில் தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை யாரோ இணையத்தில் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!