வாதரவத்தைப் படுகொலை – 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை 33 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூரும் நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் நேற்று மாலை இடம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் 9 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
    
இறந்த பொது மக்களை நினைவு கூருவதில் கடந்த காலங்களில் அச்சமான சூழல் நிலவிவந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இளையகுட்டி பரஞ்சோதியின் தலைமையில் உடைக்கப்பட்ட நினைவு தூபிக்கு அருகில் நேற்று நினைவேந்தல் இடம்பெற்றது.
அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட நேரம் பிள்ளையார் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் பொதுச்சுடர் மற்றும் நினைவுச் சுடர் ஏற்றி கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன், இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது. ஆனால் இவ்வாறான படுகொலைக்கு இன்றுவரையும் இந்திய அரசாங்கம் எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.

ஆனால் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் ஏதிலிகளாகவே இருந்து வருகிறோம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு யுத்தத்தின் போது உடைக்கப்பட்ட நினைவு தூவியை விரைவில் அமைத்து அவர்களை நினைவுகூருவதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் இதன் போது கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!