அமெரிக்காவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது – ராஜ்நாத் சிங்!

அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு நேற்று வந்தார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அவரை முறைப்படி வரவேற்றார். இது தொடர்பாக அமெரிக்க மந்திரி லாய்ட் ஆஸ்டின் தனது டுவிட்டர் பதிவில், ‘பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்துள்ளேன்’ என பதிவிட்டிருந்தார்.
    
இந்நிலையில், அவருக்கு டெல்லியில் முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் சந்தித்து பேசினார். இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புக்கான தொடக்க நடவடிக்கைகள் மற்றும் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்பாட்டு ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சிகளை தொடருவது குறித்து பேசப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க மந்திரி லாய்ட் ஆஸ்டின், போர் விமான என்ஜின்களுக்கான ஜெனரல் எலெக்டிரிக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது, அமெரிக்காவின் ஜெனரல் ஆட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய டிரோன்களை (எம்கியூ-9பி) இந்தியா 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.24 ஆயிரத்து 720 கோடி) விலை கொடுத்து வாங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் எனது நண்பர் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்திட்ட விருப்பங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தோ- பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விசயங்களை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!