இலங்கையில் நடுத்தர வயதுடையவர்கள் எதிர்நோக்கும் அபாயம்

இலங்கையில் நடுத்தர வயதுடையவர்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக நடுத்தர வயதுடையர்கள் மத்தியில் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென எதிர்பாராதவிதமாக ஏற்படக்கூடிய மரணங்களை தவிர்த்துக் கொள்ள அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

உயர் இரத்த அழுத்தத்தை மௌனக் கொலையாளி அல்லது சைலன்ட் கில்லர் என அழைப்பதாகவும், எவ்வித அறிகுறியும் இன்றி மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்திற்கு உயர் இரத்த அழுத்தம் அடையாளம் காணப்படாவிட்டால் அது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் ஏனைய உடல் பாகங்களை பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!