முதுகெலும்பை நேராக நிமிர்த்தி தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு சவால் விடுத்த சஜித்

சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (09.06.2023) பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச் 19ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் பிரதிநிதி ஒருவரை, இந்த நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்ய நியமிக்குமாறு கோரி அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை மாற்றியமைத்ததில் மகிழ்ச்சி.
முதுகெலும்பை நேராக நிமிர்த்தி தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு சவால் விடுத்த சஜித் | Sajith Request Dinesh For Election

எனினும் ஆளுநரின் ஒருங்கிணைப்பாளராக அரச அதிகாரி ஒருவர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அதிகாரங்களையும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுத்த மாகாண ஆணையாளர்கள், உள்ளூராட்சி ஆணையர்கள், மாநகர ஆணையர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் உள்ளனர். இவற்றை நடைமுறைப்படுத்த புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை இல்லை.

முந்தைய சுற்றறிக்கையைப் போலவே, இந்த புதிய சுற்றறிக்கையும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படும். இதில் பின்வாங்கப் போவதில்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் மக்கள் ஆணை மூலம் பதில் கிடைக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!